Wednesday, June 22, 2011

kovai


 
 
loading
 
 

some picture

Friday, March 11, 2011

அ.தி .மு .க நேர்காணல்-Admk interview

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2011/03/12/photographs/004/12_03_2011_004_012_001.jpg

தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் சித்திரவதை!

கோவை மாநகரம் மற்றும் தமிழக மேற்கு மண்டல போலீஸ் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் 26 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடத்தல், கற்பழிப்பு, பாலியல் சித்ரவதை வன்முறைகள் பெண்கள் மீது மட்டுமின்றி, ஏதுமறியா பெண் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான சம்பவங்கள் பெற்றோராலும், உறவினர்களாலும் மறைக்கப்படுகின்றன.

வெளியில் தெரிந்தால் அவமானம் நேரிடும் எனக்கருதி சம்பவத்தை மூடி மறைப்பதால், சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்.

பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகும் பெண் குழந்தைகளுக்கு கொடூர மரணம் நேரிடும்போது மட்டுமே வெளிச்சத்துக்கு வருகின்றன.

கடந்த ஆண்டில், கோவை நகரில் பள்ளிக்குச் செல்லவிருந்த 11 வயது பெண் குழந்தையும், உடன் 9 வயதான தம்பியும் கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இத்துயர சம்பவத்தில் தொடர்புடைய கால் டாக்சி டிரைவர் மோகனகிருஷ்ணன், போலீஸ் "என்கவுன்டரில்' சுட்டுக்கொல்லப்பட்டான். இச்சம்பவத்துக்கு பிறகாவது, குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்யும் நபர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுமென போலீசாரும், பொதுமக்களும் கருதினர்.

ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் கோவை மாநகராட்சி பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுமி, தனது மாமாவால் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு பின் கொலை செய்யப்பட்டாள். இதுபோன்ற சம்பவங்கள் பெண் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

உண்மையில், மேற்கண்ட சம்பவங்கள் கொலையில் முடிந்ததால்தான் விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்தது. வெளியுலகுக்கு தெரியாமலும் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

கடந்த ஆண்டில், கோவை மாநகரில் 4 பெண் குழந்தைகள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகினர். ஈவு இரக்கமின்றி குழந்தைகளின் மீது பாலியல் வக்கிரத்தை காட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் உள்ளது.

அதே போன்று, தமிழக மேற்கு மண்டலத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக மொத்தம் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 2, ஈரோட்டில் 5, நீலகிரியில் 1, திருப்பூரில் 5, சேலத்தில் 2, நாமக்கல்லில் 3, தர்மபுரியில் 1 முறையே பெண் குழந்தைகள் பாலியல் சித்வதைக்கு உள்ளாகினர். தவிர, குழந்தைகள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் போலீ சாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து வக்கீலும், கோவை பாரதியார் பல்கலை செனட் உறுப்பினருமான சண்முகம் கூறியதாவது:பனிரெண்டு வயதுக்கு உட்பட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பெரும்பாலும் அறிமுகமான நபர்களாலேயே நடக்கின்றன.

அறிமுகமில்லா நபர்களுடன் பெண் குழந்தைகள் செல்வதில்லை. கோவையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் காரில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம், நன்கு அறிமுகமான டாக்சி டிரைவரால் நடந்தது. சவுரிபாளையத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர், அந்த சிறுமியின் மாமா முறை உறவினர்.

ஏற்கனவே, தங்களுக்கு அறிமுகம் உள்ளதால் பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரிடப்போகும் ஆபத்தை உணராமல் உடன் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பெண் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். "சாக்லெட் வாங்கித்தருகிறேன், விளையாட்டு பொருள் வாங்கித்தருகிறேன் என யாராவது அழைத்தால் உடன் செல்லக்கூடாது' என, அறிவுறுத்த வேண்டும்.

கூடுமானவரை பெண் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டுச் செல்வது; உறவினர் வீடுகளில் விட்டுச் செல்வது, போன்ற செயலை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் சொல்லித்தர வேண்டும்.

பாலியல் வன்முறைகளை போலீசாரால் தடுப்பதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவு; ஆனால், பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தவிர்க்க முடியும்.இவ்வாறு, வக்கீல் சண்முகம் தெரிவித்தார்.

Wednesday, February 2, 2011

தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது: இலவசத்தால் வந்த பலன்

தனது வரி வருவாயில் கிடைக்கும் தொகையை இலவச திட்டங்களுக்கு செலவிடுவதால், தொலைநோக்கு திட்டங்களுக்கு கடன் பெற்றே செலவிட வேண்டியுள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழக அரசின் கடன் சுமை, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழக அரசின் கடன், 2009 மார்ச் 31 வரை, 74 ஆயிரத்து 858 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த ஆண்டு, 89 ஆயிரத்து 149 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிதியாண்டில், மேலும், 12 ஆயிரத்து 479 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.மாநில அரசுகளின் மொத்த கடன் அளவு, அந்த மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்துக்கு குறைவாக இருக்க வேண்டுமென மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதால், தமிழக அரசு அதற்கு உட்பட்டே இருப்பதாக கூறிக் கொள்கிறது.ஆனால், தமிழக அரசுக்கு பல்வேறு விதங்களில் வரும் வரி வருவாயை, சமூக பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு செலவிடாமல், இலவச திட்டங்களுக்கு செலவிடுவதாக, நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலம் வருவாய், 7,508 கோடி ரூபாய், பெட்ரோல் விற்பனை வரி மூலம், 6,000 கோடி ரூபாய் உள்பட வணிகவரி வசூல், 26 ஆயிரத்து 851 கோடி ரூபாய், முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 4,096 கோடி ரூபாய், மோட்டார் வாகன வரிகள் மூலம், 2,400 கோடி ரூபாய் என, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 41 ஆயிரத்து 438 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதுதவிர, வரி அல்லாத வருவாய் 4,101 கோடியாகும். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாயில், தமிழக அரசின் பங்கை, 5.305 சதவீதத்தில் இருந்து, 4.969 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்படி, 10 ஆயிரத்து 401 கோடி ரூபாய் கிடைக்கும்.

இதுதவிர, மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்காக பெறும் மானியம் 7,150 கோடி ரூபாய்.மாநில அரசின் வரி வருவாயில் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியம் போன்றவற்றுக்காக 78 சதவீதம் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த வருவாயில், 51 சதவீதம் இதற்காக செலவிடப்படுகிறது. எனினும், வருவாயை பொறுத்தவரை அனைத்து வகையிலும் ஆண்டுக்கு, 15 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் இருந்தும், செலவுகள் போக மீதத் தொகையை இலவச காஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி - சேலை, இலவச மின்சாரம், பொங்கல் பரிசுப் பொருள், "டிவி' என, அரசு செலவிடுகிறது. குறிப்பாக, உணவு மானியமாக மட்டும், 4,000 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

இதன் காரணமாகவே, மெட்ரோ ரயில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்பட பெரும்பாலான திட்டங்களை கடன் பெற்றே அரசு செலவிடுகிறது. இதனால், கடன் சுமை மற்றும் நிதிச்சுமை அரசுக்கு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது. திருப்பிச் செலுத்தும் அளவும் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க, மேலும், மேலும் கடன் பெற வேண்டியுள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு உள்ளாகவே நிதிப் பற்றாக்குறை இருக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சி காரணமாக, நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம் வரை வைத்துக் கொள்ளலாம் என, மத்திய அரசு அனுமதித்ததால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை, 3.72 சதவீதமாக உயர்ந்தது.தமிழக அரசின் மாநில திட்டக்குழு வகுத்துள்ள, 11வது ஐந்தாண்டு திட்டத்தின் காலம், வரும் நிதியாண்டுடன் முடிகிறது. இந்த காலத்துக்குள் நிதிப் பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை அந்த இலக்கை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தின் ஐந்தாண்டு திட்டக் காலத்துக்குள், ஆண்டுக்கு 9 சதவீத, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி பெறுதல், வேளாண்மையிலும் அதன் துணை நடவடிக்கைகளிலும் ஆண்டுக்கு குறைந்தளவு, 4 சதவீத வளர்ச்சி பெறுதல், தொழில்துறையில் ஆண்டுக்கு, 9.2 சதவீத வளர்ச்சி பெறுதல், பணித் துறையில் ஆண்டுக்கு 10.1 சதவீத வளர்ச்சி பெறுதல், 20 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.இந்த இலக்குகள் ஐந்தாண்டு திட்டத்தின் நான்காவது ஆண்டான இந்த நிதியாண்டு வரை எட்டப்படவில்லை.

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன ஆச்சு?

கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் துவக்கப்படவே இல்லை. பல திட்டங்கள் ஆரம்ப நிலையில் உள்ளன.தமிழக அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, கடந்த மார்ச் 19ம் தேதி தாக்கல் செய்தது. இதில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் உள்ள முக்கிய திட்டங்கள் வருமாறு:
* நவீன முறையில் தூய்மையாகவும், துரிதமாகவும் பாலை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்யவும், கோவை ஆவின் நிறுவனம், 27 கோடி ரூபாயில், தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் உதவியோடு நவீனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை இதற்கான பணிகள் துவக்கப்படவில்லை.
* தஞ்சை, நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில், கொள்ளிடம் வெள்ளத் தடுப்புத் திட்டம், 376 கோடியிலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், வெள்ளாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 164 கோடியிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணையாறு வெள்ளத் தடுப்புத் திட்டம், 69 கோடி ரூபாயிலும் என, மொத்தம், 609 கோடி ரூபாயில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதே போன்ற அறிவிப்பு, இந்த ஆண்டு கவர்னர் உரையிலும் இடம்பெற்றுள்ளது. பணிகள் துவக்கப்படவில்லை.
* இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், வீடுகள் கட்டிக் கொடுக்கவும், 100 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.
* மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிளில் படிக்கும், 10 லட்சம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இலவசமாக, "ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி', வரும் கல்வியாண்டில் இருந்து ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்து. ஆனால், இதுவரை ஒரு மாணவருக்கு கூட வழங்கவில்லை.
* மத்திய அரசின் நிதி உதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் துவக்கப்படும். மத்திய அரசு நிதி உதவியுடன், ஏழு புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு பாலிடெக்னிக் கூட புதிதாக துவக்கப்படவில்லை.
* திருவண்ணாமலையில், ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை இதற்கான கட்டுமானப் பணிகளை துவக்கவில்லை.
* வரும் நிதியாண்டில், தமிழக மின்வாரியம், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டு முயற்சி திட்டங்கள் மூலம், 1,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கூடுதலாக நிறுவப்படும் என வழக்கம் போல அறிவிக்கப்பட்டது. ஆனால், புதிதாக மின் உற்பத்தித் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
* வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப் பகுதிகளுக்கு, குடிநீர் வழங்கும் திட்டம், 1,800 கோடி ரூபாயில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டியதோடு சரி. பணிகள் துவக்கப்படவில்லை.
* யானைக்கால் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்றவற்றை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத உதவித் தொகையாக, 400 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கும் பணி ஏதும் துவக்கப்படவில்லை.இதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து, தமிழக அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.

Thursday, December 30, 2010

இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி?

http://hindia.in/tamilnews/wp-content/uploads/2010/12/State-Electricity-Board.jpg 
திருப்பூர்: இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத் தும் முறை குறித்து, மின் வாரியம் தெளிவுபடுத்தி உள்ளது.
திருப்பூர் மின்பகிர் மான வட்ட மேற் பார்வை செயற்பொறி யாளர் நிர்மலதா வெளி யிட்டுள்ள அறிக்கை: மின் கட்டணங்களை இணைய தளம் வழியாக செலுத்தும் மின் நுகர் வோர், இணைய தளம் மூலம் www.tneb.in என்ற இணைய தளத்தில் நுழையவும்; அதில் காணப்படும் "பில்லிங் சர்வீசஸ்' என்ற தலைப் புக்குள் "ஆன்லைன் பில் பேமன்ட்' என்ற துணை தலைப்பை "கிளிக்' செய்து மின் கட்டண நுழைவாயில் "இன்டர் நெட் பேமன்ட் கேட்வே' என்ற படிவத்தில் கேட்கப் பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, மின் கட் டணத்தை செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் ஏ.டி.எம்., அட்டைகள் மூல மாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இணைய தளத்தில் பணம் செலுத்தலாம். இணைய தள வணிக சேவை மூலம் மின் கட் டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ் பாங்க், ஐ.சி.ஐ. சி.ஐ., சிட்டி யூனியன் பாங்க், ஐ.ஓ.பி., - ஐ.பி., ஆகிய வங்கிகளில் உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

Monday, December 27, 2010

கடும் பனியிலும் விமானம் தரையிறக்கலாம் : கை கொடுக்கிறது "3 பி' தொழில் நுட்பம்

http://img.dinamalar.com/data/large/large_154205.jpg 
கோவை : "கடும் பனிப்பொழிவு காலங்களிலும், "3பி' தொழில் நுட்பத்தில் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்கலாம்; பயணிகள் அஞ்சத் தேவையில்லை' என, கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி தெரிவித்தார்.

டில்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பார்வை தூர வரையறையை விமான போக்குவரத்துத்துறை தளர்த்தி, நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. குறைந்தபட்சமாக 50 மீ., வரை தெளிவான பார்வைப் புலன் இருந்தால் விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். தரையிறக்குவதில் கையாளப்படும் மூவகை தொழில் நுட்பத்தில் "3பி' முறையில் விமானத்தை தரையிறக்க முடியும். இத்தகைய தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, விமானிகளின் எண்ணிக்கை இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே மோசமான வானிலை நிலவும் போது விமான சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே "3பி' தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற விமானிகள் உள்ளனர்.

கோவை விமான போக்குவரத்து மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.எல்.எஸ்., (இன்ஸ்ட்ருமென்ட் லேண்டிங் சிஸ்டம்) எனப்படும் விமானம் தரையிறங்கும் முறையில் பார்வை தூர வரையறை ( விசிபிலிட்டி லிமிட் ) மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில், முதல் பிரிவு 800 மீ., மேல், இரண்டாம் பிரிவு 500 மீ., மேல் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது பிரிவில் ஏ.பி.சி., என, மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இதில் "3பி' உட்பிரிவில் 50 மீ., வரை தெளிவான பார்வை இருந்தாலே விமானங்களை தரையிறக்க முடியும். தேர்ந்த விமானிகளால் மட்டுமே இம்முறையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும். ஒரு சில நிறுவனங்களில் மட்டுமே இத்தகைய பிரத்யேக பயிற்சி பெற்ற விமானிகள் பணியில் உள்ளனர். இதன் காரணமாகவே, கடும் பனிப்பொழிவு நிலவும் போதும். ஒரு சில நிறுவனங்களின் விமான சேவை ரத்து செய்யப்படுவதில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் குளிர் காலத்தில் "ஜீரோ விசிபிலிட்டி' பார்வை தூரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் உள்ளது. இந்தியாவில் அதற்கான தேவை இல்லாததால் அத்தகைய தொழில் நுட்பம் பின்பற்றப்படுவதில்லை. எதிர் காலத்தில் தேவை ஏற்பட்டால் "ஜீரோ விசிபிலிட்டி' நேரத்திலும் விமானத்தை தரையிறக்கும் தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளது. பார்வை தூர வரையறை குறைக்கப்படுவதால், விமான பாதுகாப்பு குறித்து பயணிகள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
Related Posts Plugin for WordPress, Blogger...